search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் உடல்நலம்"

    • கர்ப்பிணிகள் பயம், பதற்றம் நீங்கி மன நிலையைச் சீராக வைத்துக்கொள்வதற்கு கர்ப்பகால யோகா பயிற்சிகள் உதவுகிறது.
    • ஒரு நாளைக்கு 30 முதல் 45 நிமிடங்கள் வரை பயிற்சி செய்தால் போதும்.

    பிள்ளைப்பேறு, பெண்களுக்கு மறுபிறவி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கர்ப்ப காலத்தில் பலருக்கு பயம், குழப்பம், பதற்றம், கோபம், எரிச்சல் போன்ற உணர்வு மற்றும் உடல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவற்றை கையாள்வதற்கு யோகா எந்த வகையில் உதவும் என்று நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சென்னை ராமாபுரத்தை சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஜெயபிரபா.

    கர்ப்ப காலத்தில் எந்த மாதத்தில் இருந்து யோகா பயிற்சி தொடங்கலாம்?

    கருவுற்று இருக்கும் பெண்கள் மூன்று மாதம் முடிந்து, 4-வது மாதத்தின் தொடக்கத்தில் இருந்து பயிற்சிக்குத் தயாராக வேண்டும். மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று காலை, மாலை இரண்டு வேளையும் உடலை வருத்தாமல் எளிதாக செய்யக்கூடிய பயிற்சிகளை, பயிற்சியாளரின் மேற்பார்வையில் செய்யலாம். ஒரு நாளைக்கு 30 முதல் 45 நிமிடங்கள் வரை பயிற்சி செய்தால் போதும்.

    கர்ப்பிணிகள் என்னென்ன யோகாசனங்களை செய்யலாம்?

    தடாசனம், பத்தகோணாசனம், வஜ்ராசனம், யோகா நமஸ்காரம், ஆனந்த சயனாசனம், பாலாசனம், சவாசனம், மகாமுத்திரா மற்றும் மூச்சுப் பயிற்சி என மொத்தம் எட்டு ஆசனங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. இவை கருவுற்றிருக்கும் பெண்கள் பிரசவத்தை உடல் மற்றும் மனரீதியாக எதிர்கொள்ளும் வகையில் அவர்களைத் தயார்படுத்துகிறது. இவற்றை பயிற்சியாளரின் துணையுடன் செய்வதே பாதுகாப்பானது.

    எத்தனை மாதங்கள் இந்தப் பயிற்சிகளை செய்ய வேண்டும்?

    பிரசவம் வரை இந்தப் பயிற்சிகளை செய்யலாம். 8-வது மாதத்தில் பயிற்சி செய்யும்போது லேசாக மூச்சு வாங்கும். மூச்சுப் பயிற்சிகளை ஆரம்பத்தில் இருந்து செய்யும்போது இந்த சிரமம் ஏற்படாது. குழந்தையின் எடை கூடும்போது உட்கார்ந்து எழும் பயிற்சிகள் செய்வது சற்று சிரமமாக இருக்கும். மற்ற பயிற்சிகளை சற்று இடைவெளி விட்டு ஓய்வெடுத்து செய்யலாம்.

    கர்ப்பகால யோகா பயிற்சிகள் செய்வதன் நன்மைகள் என்ன?

    கர்ப்பிணிகள் பயம், பதற்றம் நீங்கி மன நிலையைச் சீராக வைத்துக்கொள்வதற்கு கர்ப்பகால யோகா பயிற்சிகள் உதவுகிறது. கர்ப்பிணிகள் தன்னைப்போல, பல கர்ப்பிணிகளுடன் ஒன்றாக சேர்ந்து இந்தப் பயிற்சிகளை செய்யும்போது தனிமை பயம் நீங்கும். ஆழ்ந்த தூக்கம் கிடைப்பதால் கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் தாயின் உடல்நிலை சீராக இருக்கும். தேவையில்லாத எதிர்மறை சிந்தனைகள் குறையும். வயிற்றில் இருக்கும் கருவைத் தாங்குவதற்கும், எளிதாக பிரசவிப்பதற்கும், எலும்புகள், தசை மற்றும் தசை நார்களை உறுதியாக்குவதற்கும், உடலின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிப்பதற்கும் இந்தப் பயிற்சிகள் உதவும்.

    • மெலிதான தோற்றத்தைக் கொடுப்பதால் இளம்பெண்கள் இதை விரும்பி அணிகின்றனர்.
    • ஷேப்வேர்களை அடிக்கடி பயன்படுத்துவது பெண்களின் ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

    ஷேப்வேர் அணியும் பெண்கள் அசவுகரியம் காரணமாக கழிவறைகளை பயன்படுத்தாமலேயே இருப்பார்கள். இதனால், அவர்களுக்கு சிறுநீர் கோளாறு மற்றும் சிறுநீர் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகலாம். இது சிறுநீர்ப்பையில் அழுத்தத்தை அதிகரித்து, பாதிப்பை ஏற்படுத்தும். கட்டுக்கோப்பான உடல் அமைப்பை பெறுவதற்காக, தற்போதைய இளம்பெண்கள் தேர்ந்தெடுக்கும் பல வழிமுறைகளில் ஒன்று 'ஷேப்வேர்'. இது வயிறு, இடுப்பு, தொடைகள் போன்ற பகுதிகளில் இறுக்கத்தை ஏற்படுத்தி, அவற்றின் அளவு அதிகரிக்காமல் தடுக்கும் உள்ளாடை வகையாகும். மெலிதான தோற்றத்தைக் கொடுப்பதால் இளம்பெண்கள் இதை விரும்பி அணிகின்றனர். எனினும், ஷேப்வேர்களை அடிக்கடி பயன்படுத்துவது பெண்களின் ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் அறிந்து கொள்வது அவசியம்.

    நுரையீரல் பாதிப்பு: ஷேப்வேர், வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகளை சுருக்குவதன் மூலம் ஏற்படும் அழுத்தம் நுரையீரலை சென்றடைகிறது. இதனால் நுரையீரல் செயல்பாடு பாதிப்படைந்து மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். நுரையீரலின் இயக்கம் குறைந்தால் சுவாசப் பிரச்சினை உருவாகும்.

    ரத்த ஓட்டம்: இறுக்கமான ஷேப்வேர் சில சமயங்களில் சருமத்திலும், தசைகளிலும் மிகுந்த அழுத்தத்தைக் கொடுக்கிறது. இவ்வாறு அழுத்தம் ஏற்பட்ட இடங்களில் அதிக ரத்த ஓட்டம் தேவைப்படும். அதனால், இதயம் அதிகமான ரத்தத்தை அந்த இடத்திற்கு விரைவாகச் செலுத்தும். தொடர்ச்சியான மற்றும் வழக்கமான ரத்த ஓட்டம் மாறி, ரத்தத்தில் தேவையற்ற ரத்தக் கட்டிகள் உருவாகுவதற்கு இது காரணமாக அமைகிறது.

    சிறுநீரகப் பிரச்சினை: ஷேப்வேர் அணியும் பெண்கள் அசவுகரியம் காரணமாக கழிவறைகளை பயன்படுத்தாமலேயே இருப்பார்கள். இதனால், அவர்களுக்கு சிறுநீர் கோளாறு மற்றும் சிறுநீர் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகலாம். இது சிறுநீர்ப்பையில் அழுத்தத்தை அதிகரித்து, பாதிப்பை ஏற்படுத்தும்.

    கால்களில் உணர்வின்மை: ஷேப்வேர் தொடைகளில் அணியும்போது ஏற்படும் சுருக்கத்தின் அழுத்தம் தசைகளை இறுக்கி நரம்புகளை அழுத்துகிறது. இதனால் கால்களுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைகிறது. கால்களில் உணர்வின்மை, கூச்சம், தசைப் பிடிப்புகள் முதலியவை உருவாகின்றன. மேலும் இது கால்களில் வீக்கத்தை அதிகரிக்கவும் செய்கிறது.

    செரிமானக் கோளாறு: ஷேப்வேர் உடலின் நடுப்பகுதியில் உள்ள தசைகளை மட்டுமில்லாமல், உள் உறுப்புகள் மீதும் அழுத்தம் கொடுக்கிறது. அந்த அழுத்தம் காரணமாக வயிற்றுப் பகுதியில் உள்ள பெருங்குடல் வழியாக உணவு செல்லும் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. 'இரைப்பை உணவுக்குழாய் ரிப்ளக்ஸ் நோய்' ஷேப்வேர் பயன்படுத்துபவர்கள் அனுபவிக்கும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாகும்.

    தசைகள் வலுவிழக்கிறது: ஷேப்வேர் அணியும்போது ஏற்படும் அழுத்தம், தசைகளை தளர்த்தி, அவற்றின் செயல்பாட்டை குறைத்து, பலவீனப்படுத்தி வலுவிழக்கச் செய்கிறது.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • நீச்சல் பயிற்சி மாதவிலக்கு கோளாறுகளை குணமாக்குவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
    • எல்லா வயது பெண்களும் நீச்சலை கற்றுக் கொள்ளலாம்.

    உடலின் அனைத்து தசைகளையும் ஒரே நேரத்தில் செயல்பட வைக்கும் பயிற்சி நீச்சல் ஆகும். எல்லா வயது பெண்களும் நீச்சலை கற்றுக் கொள்ளலாம். வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் என அனைவரும் செய்யக் கூடிய பயிற்சிகளில் நீச்சல் பிரதானமாக உள்ளது. பெண் குழந்தைகளுக்கு ஐந்து வயதில் நீச்சல் கற்றுத்தர ஆரம்பிக்கலாம். சிறு வயதில் இருந்தே நீச்சல் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு உடல் தசைகள் வலுவாகவும், ஆரோக்கியம் சீராகவும் இருக்கும்.

    உடல் பருமனை குறைக்க உதவும் பயிற்சிகளில் நீச்சல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சராசரியாக ஒரு மணி நேரம் பெண்கள் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும்போது, அவர்களது உடலில் 400 கிலோ கலோரி எரிக்கப்படுவதாக ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன. இதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்து எடை சீராகிறது. தினமும் நீச்சல் பயிற்சி செய்பவர்களுக்கு, வயிற்றில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினை படிப்படியாக குறையும்.

    மெனோபாஸ் காலங்களில் உடல் சோர்வு, வெறுப்பு, எதிலும் ஈடுபாடு ஏற்படாத மனநிலை, கவலை போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும். அந்த சிக்கல்களுக்கு சிறந்த தீர்வாக நீச்சல் பயிற்சி அமைகிறது. தினமும், அரைமணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்வதால் மனம் லேசாகிறது. நீந்தும்போது மனச்சிதறல் நீங்கி, மனம் ஒருநிலை அடைந்து, அமைதி ஏற்படும். அதன் மூலம் இரவில் ஆழ்ந்த உறக்கம் கண்களை தழுவும்.

    நீச்சல் பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் பிரச்சினைகள் மற்றும் மாதவிலக்கு கோளாறுகள் சீராவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. பிரசவத்துக்கு தயாராகும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நீச்சல் பயிற்சி செய்வதன் மூலம் பிரசவ கால நெருக்கடிகள் அகன்று, சுகப்பிரசவம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் ஆய்வுகளில் அறியப்பட்டுள்ளது.

    நீச்சல் நல்ல மூச்சுப்பயிற்சியாக அமைகிறது. அதன் மூலம் நுரையீரல் வலுப்பெற்று சுவாச பிரச்சினைகள் நீங்குவதுடன், மன அழுத்தமும் குறைகிறது. நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும்போது இதயம் சீராக இயங்குவதால், ரத்த ஓட்டமும் சீராகும். அதன் மூலம் முதுகு, மூட்டுகள், தண்டுவடம் ஆகியவை வலுவாகின்றன. நீச்சல் பயிற்சி காரணமாக குடல் இயக்கம் சீரடைவதால், செரிமான சக்தி தூண்டப்பட்டு, அஜீரண கோளாறு அகலும். பசியைத் தூண்டச் செய்வதுடன், மலச்சிக்கல் பிரச்சினையும் நீங்கும்.

    • மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் மூலம் காப்பீடு வழங்க வேண்டும்.
    • முதன்முதலாக இங்கிலாந்தில் தான் 1978-ம் ஆண்டில் செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பிறந்தது.

    முதன்முதலாக இங்கிலாந்தில் தான் 1978-ம் ஆண்டில் செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பிறந்தது. இந்த முறையில் இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளில் சுமார் 80 லட்சம் குழந்தைகள் பிறந்திருப்பதாக செயற்கை கருவூட்டலுக்கான இந்திய சங்கம் கூறுகிறது.

    2017-ம் ஆண்டு அறிக்கையின்படி இந்திய சந்தையில் இந்த சிகிச்சைக்கான மருந்துகள், கட்டணங்கள் மட்டும் ஆண்டுக்கு ரூ.1,832 கோடி வரை சந்தைப்படுத்தப்பட்டு இருக்கிறது. இது படிப்படியாக உயர்ந்து 2023-ல் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் அதிகரித்து இருப்பதாக மருத்துவ பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

    இன்றைய நவீன தொழில்நுட்பம் மூலம் 90 சதவீத குழந்தையில்லா பெண்களை கருத்தரிக்க வைக்க முடியும். மாத்திரைகள், ஊசிகள், IUI மூலம் குழந்தை கிடைக்காமல் போனால் IVF (டெஸ்ட் டியூப்) அல்லது ஜெர்மன் தொழில் நுட்பத்தில் ICSI எனப்படும் சிகிச்சை மூலம் கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது. உயிரணுக்கள் எண்ணிக்கை 1 மில்லியன் அணுக்கள் இருந்தாலே இந்த சிகிச்சை மூலம் அணுக்களை கரு முட்டைக்குள் செலுத்தி கருத்தரிக்க செய்ய முடியும்.

    கருப்பையில் கணவனின் விந்தணுவை செயற்கையாக ஊசி மூலம் செலுத்துதல், சோதனைகுழாய் மூலம் கருத்தரித்தல், சோதனைக் குழாயில் கருவூட்டிய கருவை தாயின் கருப்பையில் பொருத்துதல் போன்ற சிகிச்சை முறைகளுக்கு காப்பீடு பெறும் வசதி இல்லை.

    கடின சிகிச்சை முறை, பணச்சுமை, உடல்நல பாதிப்பு போன்ற அம்சங்களால் அந்த சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள பலரும் தயங்குகின்றனர். எனவே அவற்றுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் மூலம் காப்பீடு வழங்க வேண்டும். அது கருத்தரித்தல் சிகிச்சை மேற்கொள்ளும் தம்பதிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

    • ஆலம் விழுது பால் கசாயமும் குடிக்கலாம்.
    • தாய்மை புனிதமானது.

    தாய்மை புனிதமானது. கர்ப்பப்பையின் உட்சுவர் சீராக வளர்வதற்கு ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டீரோன் ஹார்மோன்கள் சீராகச் சுரக்க வேண்டும்.

    சில பெண்களுக்கு கர்ப்பப்பையின் உட்சுவர் மெலிதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதன் உட்சுவர் வளர்ச்சி படிப்படியாக அதிகரித்து 10 மி.மீ. முதல் 12 மி.மீ. வரை வளர்வது கருவுறுதலுக்குச் சிறந்தது. ஸ்கேனில் ஹெட்ரோஜினியஸ் அல்லது டிரிபிள் லேயர் எனக் குறிப்பிடும் வளர்ச்சி கருவுறுவதற்கு வசதியாக அமையும்.

    உளுந்தில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் சத்து இருக்கிறது. இதனால்தான் தென் இந்தியாவில் மரபு உணவாக நமது முன்னோர் உளுந்தங்கஞ்சியை வைத்திருக்கிறார்கள். பெண்கள் பூப்பெய்தியவுடன் வழங்கப்படும் முதல் உணவு இது. மாதவிடாயின் முதல் 15 நாட்களுக்குக் காலை உணவாகத் தொடர்ச்சியாக உண்டுவருவது கர்ப்பப்பையை ஆரோக்கியமாக பலப்படுத்தும்.

    ஆலம் விழுது பால் கசாயமும் குடிக்கலாம். அதாவது, ஆலம் விழுது 50 கிராம், 200 மி.லி. பால், 200 மி.லி. தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து, 100 மில்லியாக சுண்டும் வரை காய்ச்சி, பின் வடி கட்டி கொஞ்சம் கருப்பட்டி சேர்த்துத் தேநீராக அருந்தலாம். காலை, மாலை இருவேளையும். பழங்களில் அத்தி, மாதுளை, கருப்பு திராட்சை விதையுடன் சாப்பிடுவதும் மிக்க பலனை தரும் என்று சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    • சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பு நடைபெறுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
    • சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெற்றெடுப்பது தாய்-சேய் இருவருக்கும் பாதுகாப்பானது.

    தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்புபடி கடந்த ஐந்து ஆண்டுகளில் சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பு விகிதம் 4.3 சதவீதம் அதிகரித்துள்ளது. தனியார் மருத்துவ மனைகளில் தான் சிசேரியன் பிரசவங்கள் அதிகம் நடைபெறுகின்றன. சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பு நடைபெறுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

    * பெண்கள் தாமதமாக திருமணம் செய்து கொள்வது, பணி நிமித்தம் காரணமாக குழந்தை பிறப்பை தள்ளிப்போடுவது, 35 வயதை எட்டிய பிறகு கருத்தரிப்பது போன்றவை சிசேரியன் பிரசவத்திற்கு காரணமாக அமைந்திருக்கின்றன.

    * உடல் பருமனும் சிசேரியன் பிரசவத்திற்கு வழிவகுக்கிறது. பி.எம்.ஐ. அளவு 25-க்கு மேல் இருந்தால் பிரசவத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அது சிசேரியன் பிரசவத்திற்கு காரணமாகிவிடும்.

    * சில பெண்கள் பிரசவ வலிக்கு பயந்து சிசேரியன் மூலம் குழந்தை பெற்றெடுத்துக்கொள்வதற்கு விரும்புகிறார்கள்.

    * பிரசவ அறையில் அதிக நேரம் செலவிடும் சூழலும் சிசேரியனை தேர்ந்தெடுக்க காரணமாகிவிடுகிறது. குழந்தை பிறப்புக்கு நிர்ணயிக்கப்பட்ட கால அளவை கடந்தும் பிரசவ வலி ஏற்படாதபோது, தாய்-சேய் இருவரது உடல் நலனை பாதுகாக்கும் பொருட்டு சிசேரியனை தேர்ந்தெடுக்க நேரிடுகிறது.

    சுகப் பிரசவத்திற்கு வழிமுறைகள்

    * சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெற்றெடுப்பது தாய்-சேய் இருவருக்கும் பாதுகாப்பானது. பிரசவம் தொடர்பான பல்வேறு சிக்கல்களையும், ஆபத்துக்களையும் குறைக்கும்.

    * நீண்ட தூர ஓட்டப் பந்தயத்திற்கு தயாராகுவதற்கு உடலுக்கு போதுமான ஆற்றல் (ஸ்டெமினா) தேவைப்படும். பிரசவமும் அது போன்றதுதான். மாரத்தான் ஓட்டப்பந்தயத்திற்கு தயாராகுவதுபோல 10 மாத கர்ப்ப காலத்தையும் கருத வேண்டும். அதற்கேற்ப செயல்பட வேண்டும்.

    * தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் இயற்கையாகவே சுக பிரசவம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனினும் மருத்துவரின் ஆலோசனை பெற்று உடல் நிலைக்கு ஏற்ற எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது அவசியமானது.

    * 'ஸ்குவாட்' எனப்படும் குனிந்து நிமிரும் உடற்பயிற்சியை செய்வது பிரசவத்தை எளிதாக்கும். கால்களை நேர் நிலையில் வைத்துக்கொண்டு மூட்டுகளை நன்றாக மடக்கியபடி குனிந்து நிமிரும்போது இடுப்பு பகுதிகள் விரிவடையும். கருவில் இருக்கும் குழந்தை எளிதாக பிரசவ நிலைக்கு வருவதற்கு வழிவகுக்கும். இந்த பயிற்சியை மருத்துவ ஆலோசனை பெற்று உடற்பயிற்சியாளரின் அறிவுரையின்படி மேற்கொள்ள வேண்டும்.

    * பிரசவ காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை பயிற்றுவிக்கும் மையங்கள் இருக்கின்றன. அங்கு பயிற்சி பெறுவது பிரசவத்தை எளிதாக்கும்.

    * கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது ஆரோக்கியமானது. உடலுக்கு போதுமான புரதம் மற்றும் ஆற்றலை வழங்கும் உணவுகளை உட்கொள்வதன் மூலம் கருப்பையை வலுவாக்க முடியும்.

    • ஆண்களை விட பெண்கள்தான் தினமும் அதிக நேரம் வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள்.
    • அலுவலக வேலை நேரம் தவிர்த்து வீட்டில் முழு நேர வேலை செய்ய வேண்டிய சூழல் பெண்களுக்கு இருக்கிறது.

    ஆண்களை விட பெண்கள்தான் தினமும் அதிக நேரம் வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள். அலுவலக வேலை நேரம் தவிர்த்து வீட்டில் முழு நேர வேலை செய்ய வேண்டிய சூழல் பெண்களுக்கு இருக்கிறது. காலையில் தேநீர் தயாரித்து குடும்பத்தினருக்கு கொடுப்பது முதல் இரவில் உணவு சமைத்து பரிமாறுவது வரை ஓய்வில்லாமல் உழைக்கும் சுபாவம் பெண்களுக்கு உண்டு. அப்படி அதிக நேரம் வேலை செய்யும்போது ஒருவித சோர்வு எட்டிப்பார்க்கும். சற்று நிதானத்தோடு சிந்தித்து செயல்பட்டால் பெண்கள் தங்கள் உடல் நலனையும், மன நலனையும் மேம்படுத்திக்கொள்ள முடியும்.

    சோர்வு: உணவை தவிர்ப்பது, போதுமான தூக்கம் இல்லாதது, தண்ணீர் குடிக்காதது, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்வது உள்ளிட்ட பல காரணங்களால் சோர்வு ஏற்படலாம். பெண்கள் தொடர்ந்து பிஸியாக இருந்தாலோ, நீண்ட நேரம் வேலை செய்து கொண்டிருந்தாலோ ஊட்டச்சத்து விஷயத்தில் கவனம் செலுத்த மறந்து விடுகிறார்கள். தூக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் குறைவான நேரமே தூங்குகிறார்கள். முழு உடல் ஆற்றலையும் தங்களின் வேலைகளுக்கு செலவிடுகிறார்கள். வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உடல் நலத்தில் அலட்சியம் கொள்வது நீரிழிவு நோய், தைராய்டு, வைட்டமின் குறைபாடு போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.

    மாதவிடாய் பிரச்சினைகள்: பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகள் ஏற்படுவது பொதுவானது. மாதவிடாய் காலங்களில், கடுமையான தசை பிடிப்புகளையும் சமாளிக்க வேண்டியிருக்கும். அதிலும் பி.சி.ஓ.டி. எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடல் பருமன், டைப்-2 நீரிழிவு நோய், இதய நோய், மலட்டுத்தன்மை மற்றும் மாதவிடாய் சுழற்சியின்போது முகப்பரு போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது.

    மன அழுத்தம்: நீண்ட நேரம் வேலை செய்யும் பெண்கள் அதிக மன அழுத்தத்தை எதிர்கொள்வதை ஆய்வுகளும் உறுதிபடுத்தியுள்ளன. அன்றாட வாழ்க்கைக்கு தேவையான ஆற்றலை கையாளும் திறன் தன்னிடம் இல்லை என்பதை மூளை உணரும்போது, மன உளைச்சலை அனுபவிக்க வேண்டியிருக்கும். இருப்பினும் நிதி சிக்கல்கள், உறவுகளில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் உடல்நல பாதிப்பு காரணமாகவும் திடீர் மன அழுத்தம் ஏற்படலாம். அந்த சமயத்தில் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

    பலவீனம்: பொதுவாக பெண்கள் உணவில் போதுமான ஊட்டச்சத்துக்களை சேர்த்துக்கொள்ளாதபோது பலவீனத்தை எதிர்கொள்கின்றனர். இது ரத்த அழுத்தம், குறிக்கோள் மீது ஆர்வமின்மை, வேலையில் செயல்திறன் குறைதல் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இவை அனைத்தும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். சமச்சீரான உணவு பழக்கத்தை கையாள்வது பற்றி உணவியல் நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவது பல வீனத்தை குறைக்க உதவும்.

    செரிமான பிரச்சினைகள்: உணவுப்பழக்கம், பாக்டீரியா தொற்றுகள், உட்கொள்ளும் சில மருந்துகள் போன்றவற்றால் திடீர் செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம். ஒவ்வொரு பெண்ணும் தினமும் மூன்று வேளையும் ஆரோக்கியமான, சமச்சீரான உணவு உட்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் ஆரோக்கியமான நொறுக்கு தீனிகளை சாப்பிடலாம். நீண்ட வேலை நேரத்தால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் உடல்நல பிரச் சினைகளை தடுப்பதற்கு சில எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது. தினமும் சில நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யலாம். அதன் மூலம் வெளியாகும் எண்டோர்பின்கள் மன அழுத்தத்தை குறைத்து, மகிழ்ச்சியையும் தக்க வைக்க உதவும். ஓய்வுக்கு போதிய நேரம் ஒதுக்குவதன் மூலமும், பிரச்சினைகளை சமாளிக்கும் திறன்களை வளர்த்துக்கொள்வதன் மூலமும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

    • வாரம் ஒருமுறை மூட்டுப்பகுதிகளில் மசாஜ் செய்யலாம்.
    • உடல் பருமனால் பெண்களே அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள்.

    வயதானவர்களை அதிகமாகத் தாக்கும் மூட்டுவலி பிரச்சினை, தற்போது இளம்பெண்களிடமும் பரவலாக இருக்கிறது. உடல் பருமன், உடற்பயிற்சி செய்யாதது, ஹார்மோன் மாற்றங்கள், சர்க்கரை நோய், காசநோய், மரபுவழி, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்றவை மூட்டுவலி பாதிப்புகளை உண்டாக்கும்.

    உடலில் கால் மூட்டு, தோள்பட்டை, கைமூட்டு, மணிக்கட்டு, இடுப்பு மூட்டு, கால் பாதம் ஆகிய முக்கிய மூட்டு பகுதிகள் உள்ளன. எலும்புகள் இணையும் இடங்களான இப்பகுதிகளில் ஏற்படும் அசவுகரியமான உணர்வு, சோர்வு, வலி, வீக்கம் போன்ற உணர்ச்சிகள் மூட்டுவலி பிரச்சினைகளின் அறிகுறியாகும். இயல்புக்கு மீறிய எந்த வலியையும் உதாசீனப்படுத்தாமல் சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி பரிசோதித்து சிகிச்சை பெற வேண்டும்.

    இவ்வாறு மூட்டுவலி பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை மையமாகக் கொண்டே உலக 'ஆர்த்ரைடிஸ் தினம்' ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12-ந் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆர்த்ரைடிஸ் என்பது 'ஆர்த்ரோ' எனும் கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இதற்கு 'மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் அல்லது அழற்சி' என்பது பொருள்.

    தற்போது இளம்பெண்கள் பலரும் மூட்டுவலியால் அவதிக்குள்ளாகிறார்கள். பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் காரணமாக 'ஈஸ்ட்ரோஜன்' எனும் ஹார்மோனின் சுரப்பு ஒவ்வொரு மாதமும் குறையும். இது மூட்டுகளின் நெகிழ்வு தன்மைக்கு காரணமான 'கார்டிலேஜ்' உருவாக்கத்தைக் குறைக்கும். இதனால் இளம்பெண்களுக்கு மூட்டுவலி ஏற்படுகிறது.

    மெனோபாஸ் காலத்தை தாண்டிய பெண்களும் மூட்டுவலியால் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். உடல் பருமனால் பெண்களே அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள். இவர்களையும் எளிதில் மூட்டுவலி பிரச்சினை தாக்குகிறது. மூட்டுவலிக்கான வாழ்வியல் காரணங்களை அறிந்து, வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் வலியைக் குறைக்கலாம்.

    காசநோய், சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு பக்கவிளைவின் காரணமாக மூட்டுவலி இருந்தால், சிகிச்சை பெற்று அந்நோய்களை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உடல் பருமனாக இருக்கும் பெண்கள் எடையைக் குறைக்க வேண்டும். நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி போன்றவை மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

    மூட்டுகளுக்கு வலிமை தரக்கூடிய கால்சியம் சத்துக்கள் நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வாரம் ஒருமுறை மூட்டுப்பகுதிகளில் மசாஜ் செய்யலாம். இது சரும துவாரங்களின் வழியாக எலும்பு மூட்டுகளை இணைக்கும் கொலாஜென் புரதத்தை அதிகரிப்பதால் மூட்டுவாத நோய்கள் வராமல் தடுக்கும்.

    • உடல் ரீதியாக, மன ரீதியாக பல்வேறு துயரங்களை எதிர்கொள்கிறார்கள்.
    • ஆரோக்கியத்தில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன.

    பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டிருக்க, குழந்தை திருமணங்களும் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கின்றன. அதனால் உடல் ரீதியாக, மன ரீதியாக பல்வேறு துயரங்களை எதிர்கொள்கிறார்கள்.

    அவற்றுள் டீன் ஏஜ் வயது கர்ப்பங்கள் கவலை அளிப்பதாக உள்ளன. குழந்தை திருமணங்களால் கர்ப்பத்தை தாங்கும் சக்தியை உடல் பெறமுடியாமல் போவதால் அவை ஆரோக்கியத்தில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. சமீபத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில், குழந்தைத் திருமணத்திற்கு தள்ளப்படும் சிறுமிகளில் 5 பேரில் 3 பேர் டீன் ஏஜ் வயதுக்குள்ளேயே கர்ப்பம் அடைந்துவிடுவது தெரியவந்துள்ளது.

    ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சித்தூர், உத்தரப்பிரதேசத்தின் சந்தோலி, மகாராஷ்டிராவின் பர்பானி, ஒடிசாவின் கந்தமால் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள நான்கு மாவட்டங்களில் இருக்கும் 40 கிராமங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. குழந்தைத் திருமணங்களுக்கும், பிற்போக்குத்தனமான நடைமுறைகளுக்கும், பாலின சமத்துவமின்மைக்கும் தொடர்பு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    வறுமை சூழல், வேறு இடங்களுக்கு இடம் பெயர்வது, காதல் போர்வையில் குடும்பத்துக்கு தெரியாமல் வேறு நபருடன் ஓடி விடுவாரோ என்ற பயம், திருமணத்துக்கு முன்பு கர்ப்பமாகிவிடுவாரோ என்ற அச்சம் உள்ளிட்டவை குழந்தைத் திருமணத்திற்கு காரணமாக அமைந்திருக்கின்றன.

    குழந்தைத் திருமணம் ஏற்படுத்தும் எதிர்மறையான விளைவுகளைப் பற்றி 16 சதவீத பெற்றோர் மற்றும் மாமியார்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது. குழந்தைத் திருமணத்தை எதிர்கொள்ளும் சிறுவர்-சிறுமிகளில் 34 சதவீதத்தினருக்கு மட்டுமே அதன் பாதிப்பு புரிந்திருக்கிறது.

    • குழந்தைகளும் தன் எல்லா தேவைகளுக்கும் தாயையே சார்ந்து இருப்பார்கள்.
    • பெண்களுக்கு தனக்கென எதுவுமே இல்லையே என்ற வெறுமை உணர்வு தலை தூக்க துவங்கும்.

    அம்மா!! நமக்கு உயிர் கொடுத்தவள், ஊன் கொடுத்தவள், பிறந்த பின்பு ஊட்டச்சத்துடன் அன்பையும் ஊட்டி வளர்த்தவள். வாழ்க்கை முழுவதும் நம் சுமைகளை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி தாங்க விரும்புபவள். அப்படிப்பட்ட அம்மாவிற்கும் வயதாகும். வயதாவதினால் ஏற்படும் உடல், மன ரீதியான பிரச்சனைகளும் தோன்றும். அவற்றை மகன் அல்லது மகள், அவர்களுக்கு நாம் திருப்பி செலுத்தக்கூடிய கடனாகவும் கடமையாகவும் அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு உதவுவது சிறந்தது. அந்த வகையில் 45, 50 வயதை கடக்கும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை கீழ் வருமாறு பார்ப்போம்.

    மாதவிடாய் நிற்கும் காலம்

    இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு இயற்கையாய் சுரக்கும் ஹார்மோன்களின் அளவு குறைவதோ தாறுமாறாக சுரப்பதோ நிகழ்வது இயற்கையான ஒன்றே. அந்த நேரத்தில் மனநிலையிலும் உடல் நிலையிலும் பலவிதமான அறிகுறிகளும் பிரச்சனைகளும் ஏற்படுகிறது. குறிப்பாக உணர்வு ரீதியாக அந்த நேரத்தில் பெண்கள் எரிச்சல், கோபம், அழுகை, காரணம் இல்லாத சோர்வு, பிடிமானம் இல்லாத நிலை, வெறுப்பு போன்ற பல பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள் இது மாதவிடாய் நின்று சில காலங்களில் சரியாகிவிடும் என்றாலும் அந்த நேரத்தில் அவர்களுக்கு மருத்துவ உதவியும் அன்பும் அரவணைப்பும் தேவைப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களின் அன்பும் அரவணைப்பும் இந்த பிரச்சனைகளை வெகுவாக குறைக்கும் என்பது உறுதி.

    உடலளவில் கை கால் மூட்டு வலிகள்,, தலைவலி முதுகு வலி, பசியின்மை, வயிறு உப்புசம், அதிக மாதவிடாயினால் ஏற்படும் உடல் சோர்வு, இரத்த சோகை போன்ற பல உடல் ரீதியான பிரச்சனைகளும் இந்த நேரத்தில் பெண்களுக்கு ஏற்படுகிறது. அவற்றை தகுந்த மருத்துவ ஆலோசனையின் மூலம் மருந்துகளோ, ஊட்டச்சத்து மாத்திரைகளோ கொடுத்து சரி செய்வது நல்லது.

    எலும்பு தேய்மானங்கள்

    45, 50 வயதுகளில் பெண்களுக்கு பொதுவாக எலும்பு தேய்மானத்தினால் கால் மூட்டு வலி ஏற்படுவது இயற்கையே. தனக்கென உடற்பயிற்சி செய்யாமல் ஊட்டச்சத்தில் கவனம் எடுத்துக் கொள்ளாமல் இருக்கும் பெண்களுக்கு இந்த பிரச்சனை அதிகமாகவே ஏற்படுகிறது. எனவே மருத்துவ பரிசோதனையின் மூலம் எலும்பு மூட்டுகளில் தேய்மானம் இருக்கிறதா, எலும்பின் அடர்த்தி குறைந்து இருக்கிறதா,, உடல் பருமன் இருக்கிறதா ரத்த சர்க்கரை,, ரத்த அழுத்தம் ரத்த கொழுப்பு போன்றவை சரியாக இருக்கிறதா என்பதை எல்லாம் பரிசோதித்து அதில் பிரச்சனை இருக்குமானால் உடனடியான மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொள்வது நல்லது. எலும்பு தேய்மானம் இருக்கும் பட்சத்தில் கால்சியம் கொண்ட உணவுகளை அவர்கள் எடுத்துக் கொள்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டியதும் கணவர் மகன் மகள்களின் கடமையாகும்.

    ரத்த சோகை

    பெரும்பாலான பெண்களுக்கு சிறு வயது முதலே மாதவிடாய் ஏற்படுவதினால் ரத்த சோகையும் இருக்கும். அதை பெரும்பாலான பெண்கள் கவனிப்பதில்லை. மாதவிடாய் நிற்கும் சமயத்தில் உதிரப்போக்கு அதிகமாக இருக்கும் பெண்களுக்கு ரத்த சோகை ஏற்படுகிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் என்ற புரதம், உடலுக்கு தேவையான சத்துக்களையும் பிராணவாயுவையும் எடுத்துச் செல்வது.

    இது சரியான அளவில் இருக்கும் பட்சத்தில் மட்டுமே ஒருவர் பலமாகவும் துடிப்பாகவும் இயங்க முடியும். உதிரப்போக்கு அதிகமாக இருப்பதினால் ஹீமோகுளோபின் அளவு உடலில் குறையலாம். இதுவே ரத்த சோகை. இந்நிலையில் உடலுக்கு தேவையான பிராணவாயுவும் ஊட்டச்சத்துக்களும் இரும்பு சத்தும் சரியான அளவில் செல்களுக்கு போகாத பட்சத்தில் அதீத சோர்வு, மூச்சு வாங்குதல், குறிப்பாக மாடிப்படி ஏறும் போது மூச்சு வாங்குதல், எந்த வேலையும் செய்ய பிடிக்காமை, அஜீரணம், பலவீனம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

    இதை பெரும்பாலான பெண்கள் கவனிப்பதில்லை. கடமை, வேலைப்பளு போன்ற விஷயத்தினால் இதை உதாசீனப்படுத்தி விடுகின்றனர். நாலாவட்டத்தில் ரத்த சோகை மேலும் பலவித நோய்களுக்கு வழி வகுக்கிறது. எனவே ரத்த சோகை இருக்கும் பட்சத்தில் பரிசோதனை செய்த பின்பு அவர்களுக்கு சரியான இரும்புச்சத்து நிறைந்த உணவு வகைகள் சரியான விகிதத்தில் புரதம் போன்றவைகள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    மன அழுத்தம்

    பொதுவாக பெண்கள் படித்து வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களாக இருந்து, பின் திருமணமான பின்பு குழந்தைகளை வளர்க்கும் கடமைக்காக தனக்கென ஒரு தொழில் இல்லாமல் வருமானமும் இல்லாமல் வீட்டை பராமரித்து வருவது இயல்பு. குழந்தைகளும் தன் எல்லா தேவைகளுக்கும் தாயையே சார்ந்து இருப்பார்கள். பெண்களுக்கு 40 வயதுக்கு மேல் ஆகும் பொழுது குழந்தைகள் விடலை பருவத்தில் இருப்பார்கள். அவர்கள் அம்மாவிடம் செலவழிக்கும் நேரம் குறைந்துவிடும். சில குழந்தைகள் படிப்பு மற்றும் வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்கோ வெளியூர்களுக்கோ சென்று விடுவதும் உண்டு.

    திருமணம் ஆகி குழந்தைகள் தனியே பிரிந்து சென்று விடுவதும் உண்டு. இதே காலகட்டத்தில் கணவன்மார்கள் தங்களுடைய தொழில் அல்லது வேலையில் முழு வீச்சில் இயங்கும் சூழல் இருப்பதால் அவர்களும் மனைவியுடன் போதுமான நேரத்தை செலவழிக்க முடியாமல் போய்விடுகிறது. அந்த நேரத்தில் பெண்களுக்கு தனக்கென எதுவுமே இல்லையே என்ற வெறுமை உணர்வு தலை தூக்க துவங்கும். இந்த நேரத்தில் மாதவிடாய் கோளாறுகளும் எலும்பு தேய்மானங்களும், இரத்த சோகை போன்ற ஊட்டச்சத்து குறைபாடு நோய்களும் சேர்ந்து கொண்டு அவர்களை பாடாய்படுத்தி விடுவதுண்டு.

    இந்த நேரத்தில் ஆண் பெண் குழந்தைகள் அம்மாவின் நிலையை புரிந்து கொண்டு அவர்களுக்கு தன்னை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள அவர்களுக்கு பிடித்த ஒரு பொழுதுபோக்கு அல்லது வருமானம் ஈட்டக்கூடிய தொழில் அல்லது ஏதேனும் தொண்டு செய்வதற்கான வாய்ப்பு போன்ற ஏதாவது ஒன்றில் ஈடுபடுத்தி அவர்களின் மனநிலையை பலப்படுத்தி, உடல் நிலையையும் சரிபடுத்தி, தங்களுக்காக தியாகம் செய்த தன் அம்மாவின் நிலையை சரிப்படுத்துவது மிகவும் அவசியமாகிறது.

    • கர்ப்ப காலத்தில் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்துக்குக் கூடுதல் பராமரிப்பு அவசியம்.
    • காலை, இரவு என இரு வேளையும் பற்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

    உடலின் ஆரோக்கியத்தைப் போலவே, பற்களின் ஆரோக்கியமும் முக்கியமானது. அதிலும், கர்ப்ப காலத்தில் பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்துக்குக் கூடுதல் பராமரிப்பு அவசியம். கர்ப்ப காலத்திற்கு முன்னும், கர்ப்ப காலத்திலும் பற்களைப் பாதுகாக்கும் முறைகள் குறித்து சில ஆலோசனைகள் இதோ:

    கர்ப்ப காலத்தில் சீரான இடைவெளியில் உடலைப் பரிசோதனை செய்து கொள்வது போல, பற்கள் சார்ந்த பிரச்சினைகள் ஏதேனும் உள்ளதா? என்பதைக் கண்டறிய பரிசோதனை செய்துகொள்வது அவசியம். அதிலும், தாய்மைக்குத் தயாராகும் முன்னரே பெண்கள் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இதில், பற்களில் பிரச்சினை, சொத்தை ஏதேனும் உள்ளதா, ஈறுகளின் நிலை எப்படி இருக்கிறது என அறிய வேண்டும்.

    பிரச்சினை இருப்பதைக் கண்டறிந்தால், உடனடியாக அதைச் சரி செய்வதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்வது சிறந்தது. இது, பேறு காலத்தில் பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்க உதவும். ஆனால், இந்தச் சமயத்தில் பற்களைக் கவனிக்காமல் விடும்போது, கர்ப்ப காலத்தில் முதல் 3 மாதங்களுக்கு, பற்களில் ஏற்படும் பிரச்சினைக்கான சிகிச்சையோ, மருந்தோ எடுத்துக் கொள்ள முடியாது. தற்காலிக நிவாரணியாக வலி மருந்தை மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும்.

    அதேபோல், 21 வயதில் பலருக்கும் ஞானப்பற்கள் முளைக்கும். இது சில சமயங்களில் தொந்தரவு தரக்கூடும். கர்ப்ப காலத்தில் அந்தப் பிரச்சினை ஏற்பட்டால், அந்தப் பல்லை நீக்குவதற்கான சிகிச்சை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும். எனவே முன்பே இதை மருத்துவரிடம் காண்பித்து குணப்படுத்துவது அவசியம்.

    ஈறு சார்ந்த பிரச்சினைகள்: பெண்களுக்குப் மகப்பேறு காலத்தில் ஹார்மோன்களில் மாறுதல் ஏற்படும். இதனால், ஈறுகளில் வீக்கம், ரத்தம் வடிதல் உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். இவற்றை அலட்சியம் செய்யாமல், உடனடியாகப் பல் மருத்துவரிடம் தகுந்த சிகிச்சை பெற்று ஆரம்ப நிலையிலேயே ஈறு பிரச்சினையைச் சரி செய்ய வேண்டும்.

    பற்களின் பராமரிப்பு: சாப்பிடும் போது உணவுத் துகள்கள் வாயில் தங்கிவிடும் வாய்ப்புள்ளது. இதனால் கிருமிகள் பெருகி பல் சார்ந்த பிரச்சினைகள் அதிகமாகும். இதைத் தவிர்க்க காலை, இரவு என இரு வேளையும் பற்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். தரமான பற்பசையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஈறுகளுக்கு உறுதி சேர்க்கும் வகையில், தினமும் வைட்டமின் 'சி' சத்து நிரம்பிய ஏதேனும் ஒரு பழத்தை சாப்பிடலாம். கர்ப்ப காலத்தில் இனிப்பு சார்ந்த உணவுப் பண்டங்கள் மீது ஈர்ப்பு இருக்கும். இனிப்பு வகைகளை சாப்பிட்டால், உடனடியாக வெதுவெதுப்பான வெந்நீர் கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும்.

    • காற்று மாசுபாடு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் மிகவும் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.
    • காற்று மாசுவால் பெண்கள்தான் அதிக பாதிப்பை எதிர்கொள்கிறார்கள்.

    மாசுபட்ட காற்றை சுவாசிப்பது நுரையீரலுக்கு கேடு விளைவிப்பதோடு ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளை ஏற்படுத்துகிறது. கர்ப்பிணி பெண்கள் மாசடைந்த காற்றை சில நிமிடங்கள் சுவாசிக்க நேர்ந்தால் கூட கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு 16 சதவீதம் அதிகரிக்கும் என்று அமெரிக்காவின் உத்தா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    காற்று மாசுவை ஏற்படுத்தும் வாயுக்களில் நைட்ரஜன் டை ஆக்சைடு முக்கியமானது. அந்த வாயுவை சுவாசிக்க நேரிடுபவர்களுக்கு உடல்நலக்கோளாறுகள் அதிகரிக்கும் என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

    இந்த ஆய்வை மேற்கொண்ட மேத்யூ புல்லர் கூறுகையில், "காற்று மாசுபாடு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் மிகவும் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. நாளுக்கு நாள் காற்று மாசுவின் வீரியம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. உலகளவில் அனைவரும் ஒரு சமூகமாக ஒன்றிணைந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்" என்கிறார்.

    இந்த ஆய்வுக்கு 1,300 பெண்கள் உட்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் 28 வயதுக்குட்பட்டவர்கள். கர்ப்பிணிகளும் இதில் இடம் பெற்றனர். காற்று மாசுவால் பெண்கள்தான் அதிக பாதிப்பை எதிர்கொள்கிறார்கள். அதனால் கொரோனா அச்சுறுத்தலுக்கு மட்டுமின்றி எப்போது வெளியே சென்றாலும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.

    ×